பிரான்சில் சிறப்படைந்த தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக நாடு தழுவிய திருக்குறள் திறன் இறுதி போட்டிகள்-2025

0
362

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பிரான்சு தழுவிய திருக்குறள் திறன் இறுதி போட்டிகள் இன்று 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை திறான்சி (DRANCY) நகரில் சிறப்புற நடந்தேறியது.

குறித்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது. .

இன்றைய போட்டிகளில் முதல் மூன்று இடங்களினைப் பெற்றவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும் சான்றிதழ்களும், இறுதிப் போட்டிகளில் பங்குபற்றிய அனைவருக்குமான பதக்கங்களும் சான்றிதழ்களும் 03-01-2026 இல் நடைபெறும் 27வது தமிழ்ச்சோலை முத்தமிழ் விழாவில் வழங்கப்படும்.

வெற்றியாளர் விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்விறுதிப் போட்டிக்கு முதன்மை நடுவராக நெதர்லாந்து நாட்டிலிருந்து எழுத்தாளரும் நாடகவியலாரும் உளவியல் வல்லுநருமாகிய துரையப்பா அன்ரன் அவர்கள் கடமையாற்றியிருந்தார். இவரது நாடக ஆற்றுகை 1994 இல் தேசியத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய நடுவர்களாக திருவாட்டி மணிவண்ணன் சுமதி ( இளங்கலைமாணி யாழ் – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்) மற்றும் சட்ட ஆலோசகரான திருவாட்டி துசாந்தி நித்தியதாஸ் (இளங்கலைமாணி -தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்) ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.

தமிழ்ச்சோலை மட்ட, திணைக்கள மட்ட, இறுதிப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பாராட்டி மகிழ்கின்றது. .

அனைத்து மட்டங்களிலான திருக்குறள் திறன் போட்டிகளிலும் நடுவர்களாகப் பங்கேற்றவர்களுக்கும், போட்டியாளர்களை வழிகாட்டி நெறிப்படுத்திய தமிழ்ச்சோலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும், திணைக்கள மட்டத்திலான போட்டிகளுக்கான மண்டபங்களினை ஏற்பாடு செய்து உதவிய திறான்சி (DRANCY) தமிழ்ச்சங்கத்திற்கும் போட்டிகள் நடைபெற அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மகிழ்வுடன் நன்றி நவில்கின்றது.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here