பிரான்சு பாரிஸ் நகரில் பேரெழுச்சியடைந்த மே18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும்!

0
205

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2025) ஞாயிற்றுக்கிழமை பேரெழுச்சியோடு இடம்பெற்றது.

மதியம் 14.00 மணியளவில் பாரிஸ் நகரின் Place de la Republique பகுதியில் ஆரம்பமாகிய பேரணி Place de la Bastille பகுதியில் 16.30 மணியளவில் நிறைவடைந்தது.

Place de la Bastille பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு.சிறி அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்கால் மண்ணில் 07.05.2009 இல் சாவடைந்த பிரசாந்தி அவர்களின் மகள் ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகளை இழந்த மற்றொரு குடும்ப உறுப்பினர் மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து ஒவ்வொருவராக உணர்வோடு மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர். வீரம்செறிந்த முள்ளிவாய்க்கால் மண்ணும் நினைவேந்தலுக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

,நோசிலுசெக் துணை நகர பிதா, பொண்டி நகரபிதா ஆகியோரோடு பாராளுமன்ற உறுப்பினர்களான Carlos Martens Bilongo, (député La France insoumise du Val-d’Oise)  அவர்களும் Soumya Bourouaha (Députée Seine – Saint Denis) அவர்களும் கலந்து கொண்டு மலர்வணக்கம் செலுத்தியதோடு தமது ஆதரவுகளை அனைவரும் அரங்கில் தெரிவித்துச் சென்றிருந்தனர்.

இவர்களோடு குர்திஸ்தான் மக்களும் பேரணியில் கலந்துகொண்டதுடன் மவர்வணக்கம் செலுத்தி அரங்கில் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.

பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழக கலைஞர்கள் மற்றும் தமிழ்ச்சோலை மாணவர்கள் சிறிலங்கா இராணுவ அடக்குமுறை, முள்ளிவாய்க்கால் பேரவலம்,மற்றும் இலங்கையின் சமகால அரசியலை ஊர்திப் பவனியிலும் பேரணியிலும் ஆற்றுகைப்படுத்தியிருந்தமை அனைவரையும் சிந்திக்கவைத்தது..

செந்தனிஸ் தமிழ்ச் சோலை மாணவி பரமேசுவரன் சுருதிகா , செல்வி டேவிட் சுலக்சனா, வில்நெவ் தமிழ்ச் சோலை மாணவி செல்வி பிரசாந்தினி, அவர்களின் பிரெஞ்சு மொழியிலான உரை, நியூலிசூர்மார்ன் தமிழ்ச் சோலை மாணவி சின்னத்தம்பி சிறிநிதா, லாக்கூர்நெவ் தமிழ்ச் சோலை மாணவி சுதாகர் மிர்சா மற்றும் கந்தவேள் மோசிகா ஆகியோர் பிரெஞ்சு மொழியில் உரை நிகழ்த்திய இருந்தனர்.

சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தொடர்பாளர் செல்வன் மகேஸ்வரன் நிதீபன் அவர்கள் ஆற்றியிருந்தார்.

மே 18 முள்ளிவாய்க்கால் சிறப்புக் கவிதையை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் வழங்கியிருந்தார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் திரு.சுந்தரவேல் அவர்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் திரு.மகிந்தன் அவர்களும் உரை ஆற்றியிருந்தனர்.

சிறப்ப நிகழ்வாக திறான்சி, சேர்ஜி,புளோமெனில், செவ்ரோன், ஒள்னேசுபுவா 1, ஒள்னேசுபுவா 2, லாக்கூர்னொவ், குசான்வீல் ஆகிய தமிழ்ச் சோலை மாணவ மாணவியர் இணைந்து தமிழின அழிப்பை வெளிப்படுத்திய நாட்டிய நாடகம் அனைவரையும் உணர்வடைய வைத்தது.

நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. அனைவரும் அணிவகுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தியமையைக் காணமுடிந்தது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரகமந்திரத்தோடு நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here