கொக்காவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றன!

0
718

மாங்குளம் – கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேன் மாங்குளம் பகுதியில் விபத்திற்குள்ளாகியதில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறித்த சம்பவத்தில்,யாழ். அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் அருண் (வயது 24), சந்திரசேகரம் ஜெயசந்திரன் (வயது 36), யாழ்.மாலு சந்தி பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிந்துஜன் (வயது 19) யாழ். பருத்திதுறையை சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணரூபன் (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நால்வரே விபத்தில் உயிரிழந்தனர்.
அவர்களில் ஒருவரான நவரத்தினம் அருண் கல்வியை நிறைவு செய்துவிட்டு, குடும்பச்சுமையை ஏற்று, சொந்தக்காலில் நிற்க விரும்பி வர்த்தகத்தில் ஈடுபட்டவர்.
அன்னையின் அரவணைப்பினை இழந்து, தந்தையின் வழிநடத்தலில் வாழ்ந்து வந்த சிந்துஜனால் வாழ்வில் வெகுதூரம் பயணிக்க முடியவில்லை.
ஏனைய இருவரான சந்திரசேகரம் ஜெயச்சந்திரனும் சின்னத்துரை கிருஸ்ணரூபனும் இரத்த உறவுகளாவர்.
உயிர்நீத்த இவர்களுக்கு இன்று பெருமளவானோர் அஞ்சலி செலுத்தினர்.
அயலவர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அல்வாய் – கரம்பன் இந்து மயானத்தில் பூதவுடல்கள் அக்கினியுடன் சங்கமமாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here