சிந்து சமவெளி நாகரிகம் சொல்லும் ஜல்லிக்கட்டின் வரலாறு!

0
429

மேலத்தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் பிரிவு கல்லணைக் கால்வாய்களில் ஒன்றான புது ஆற்றுப்பாசனத்தில் உள்ள ஊர் வடக்கூர்.

அந்த ஊரில் பிறந்து 1980 வரை அங்கு வாழ்ந்தவன். எங்கள் ஊரின் மந்தை அந்த வட்டாரத்தில் பிரபலம். மந்தை என்பது பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக தை ஐந்தாம் நாள் கொண்டாடப்படும் ஏறு தழுவுதல் அல்லது மாடு பிடித்தல் அல்லது ஜல்லிக்கட்டு. படத்தின் காப்புரிமை Getty Images                                                

தென் இந்தியத் தீபகற்பத்தின் முனையில் இருக்கிற தமிழ்நாடு, கேரளம்,ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நிலப்பகுதிகளில், தமிழ்நாடு நீண்ட மேய்ச்சல் நிலப்பகுதியைக் கொண்டிருக்கிறது.

இதனை முல்லை நிலம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இப்பகுதியில் கால்நடைகள் வளமாக வாழ்வதற்கான இயற்கைக் கூறுகள் உண்டு.

எங்கள் ஊரிலும் ஊரின் நான்கு பகுதிகளில் நீண்ட மேய்ச்சல் நிலங்கள் இருந்தன. ஊரில் உள்ள மாடுகள் எல்லாம் காலை எட்டு மணியளவில் ஊரின் பொது இடத்திற்கு வந்து சேரும். மாடுகளை வீட்டில் இருந்து பொது இடத்திற்கு விரட்டி விடுவார்கள். அவற்றை மேய்ப்பதற்குப் பொதுவான ஒரு குடும்பத்தினர் இருந்தனர். அக்குடும்பம் மாடுகளை ஓட்டிச் சென்று நாள் முழுவதும் புல்வெளிகளில் மேய்ந்த பிறகு மாலை வீடுகளுக்குத் திருப்பி ஓட்டி வருவார்கள். இது நாள்தோறும் நடைபெறும்.

இந்த மாட்டு மந்தையில் ‘சாமி மாடு’ அல்லது ‘ஊர் மாடு’ அல்லது ’பொலி காளை’ என ஒன்றிரண்டு காளைகள் இருக்கும். அவை கொழுகொழுவென வளமான சதைப்பிடிப்போடு நீண்ட கொம்புகளோடு ஊரைச் சுற்றி வலம் வரும்.

‘பொலி காளை போல் அலைகிறான்’ ‘ ஊர் மாடு போல் சுற்றுகிறான்’ என்பது ஊரில் உள்ள சொலவடை. வீட்டு வேலைகள் செய்யாமல் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு மேலே சொன்ன சொலவடைகள் பொருந்தும்.

இப்படியான பொலி மாடுகளே மந்தைகளில் ஏறுதழுவுதல், பட்டிகளில் அடைத்துத் திறந்துவிட்டுப் பிடிக்கும் ’வாடிவாசல்’ ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் காளைகள் ஆயின.படத்தின் காப்புரிமை Getty Images                                                

ஒரு ஊரின் பொலிமாட்டை அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் ‘மஞ்சுவிரட்டு’ அல்லது மாடு பிடித்தல் நிகழ்ச்சிகளுக்குக் கொண்டு செல்வார்கள். இந்த நிகழ்வு எனது இளம் வயது முதல் (1960) இருபத்து ஐந்தாம் வயது வரை (1980) நான் நேரில் கண்ட காட்சி. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, தேனீ எனப்படும் பகுதிகளில் இவ்வகையான காளைகளைக் கொண்டு நடைபெறும் இக்கொண்டாட்டம் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. புதிதாக உருவானது இல்லை.

மேலே சொன்ன இந்த இயல்பான பண்பாட்டு நிகழ்வுக்கு வரலாறு உண்டா என்று தேடினால் தொடர்ச்சியாக வரலாற்றுத் தரவுகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.

வரலாறுகள் என்பவை மக்களின் அன்றாட புழக்கத்தில் உள்ள நிகழ்வுகள். கல் போன்ற ஊடகங்களில் பதிவாகியிருக்கும் செய்திகள், தொல்பழம் இலக்கண இலக்கியங்களில் பேசப்படும் நிகழ்வுகள் ஆகிய பிற தரவுகளைக் கொண்டு வரலாறு கட்டமைப்பு செய்யப்படுகிறது. நடைமுறையில் இருக்கும் நிகழ்வுகளிலிருந்து பழைய நிகழ்வுகள் குறித்த தரவுகளைப் புரிந்து கொண்டு வரலாற்றை எழுதலாம். இது புனைவாக இருக்காது; இருக்கும் தரவுகளைத் தர்க்க மரபில் ஒழுங்குபடுத்தி ஒரு தொடர்ச்சியைக் கண்டறிந்து புரிந்து கொள்வது.

ஜல்லிக்கட்டுக்கு இப்படியான வரலாற்றைக் கண்டறிய முடிகிறது.

திராவிட நாகரிகத்தின் தொல்லியல் தரவாகச் சிந்து சமவெளி நாகரிகம் பல வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் கிடைத்த முத்திரைகளை நவீன முறையில் வாசித்தறிந்து (deciphering) பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளனர்.

(bbc tamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here