யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – மீசாலை ஏ 9 வீதியில் டிப்பர் வாகனம் மோதி மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு கணவன் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி வடக்கு, மீசாலையைச் சேர்ந்த 62 வயதுடைய சந்திரபாலன் பரமேஸ்வரி என்ற வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளதோடு 67 வயது சின்னையா சந்திரபாலன் என்ற வயோதிபர் படுகாயமடைந்துள்ளார்.
வீதியால் வந்த கார் ஒன்றை சோதனை செய்வதற்காக பொலிஸார் மறித்தபோது அதிலிருந்து இறங்குவதற்காக சாரதி கார் கதவைத்திறந்த வேளையில், அதனை விலத்திச் செல்ல முயற்சித்த தம்பதிகள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, கணவன் சிசிச்சை பெற்றுவருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.