முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரம், வேறு பகுதிகளைச் சேர்ந்தோரால் சூறையாடப்படுவதாக நெடுங்காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தென் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட யானைகளால் இன்னல்களை எதிர்நோக்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கூறுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டம், சுமார் 2516.9 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டமைந்துள்ளது.
இதில், 64.1 வீதம் அதாவது சுமார் 167,850 ஹெக்டயர் வனப்பகுதி என மாவட்ட செயலக தரவுகள் குறிப்பிடுகின்றன.
அத்துடன், மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 16.9 வீதமான 44040 ஹெக்டயர், விவசாய நிலப்பகுதியாகும்.
யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட யானைகளால் அல்லலுறுவதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
குறுகிய வனப்பகுதியில் அதிகளவிலான யானைகள் காணப்படுவதால், அவை குடியிருப்புக்களுக்குள் நுழைவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த யானைகளால், விவசாய நடவடிக்கை பாதிக்கப்படுவதுடன், உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.