பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டாக இந்த அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்னால் கவனவீர்ப்புப் போராட்டமும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பில் 19 அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒப்பமிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளன.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு சட்ட ரீதியான விடயம் என்பதைக் கடந்து விட்டது. நியாயத்தின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஓர் விடயமாக ஆகிவிட்டது.
ஓர் அரசியல் தீர்மானத்தின் ஊடாகத் தீர்க்கப்படவேண்டிய அடிப்படையான பிரச்சினைகளுள் ஒன்று என்ற பரிமாணத்தையும் அடைந்துவிட்டது.
12 ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலிகளை, குறுகியகாலத் தடுப்புக்குப் பிறகு, மீளவும் சமூகத்துடன் இணைய வழிவகை செய்த ஓர் அரச பொறிமுறையானது, வெறும் 132 பேர்களை மட்டும் தொடர்ந்தும் சிறைகளில் அடைத்திருப்பதானது எவ்வித சட்ட அர்த்தமும் இல்லாத செயற்பாடு.
எமது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றப் பிரதிநிதிகள், அரசின் பங்காளிகளாக மாறி, அனைத்து விடயங்களிலும் அரசுக்கு உறுதுணையாக இருக்கின்றார்கள்.
நாடாளுமன்றச் செயற்பாடுகள் அனைத்திலும் அரசை நியாயப்படுத்தி ஆதரிக்கின்றார்கள்.
ஆதரவுக்கான பிரதியீடாகத்தன்னும் – உறுதியான தளம்பலற்ற வார்த்தைகளால் பேசி – சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அவர்களால் முடியும்.
உறவுகள் சிறைகளில் வாடினாலும் பரவாயில்லை, தாம் அரசைச் சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காகவும், அரசுடனான தமது உறவுகள் பாதிப்புறக் கூடாது என்பதற்காகவும், மென்மையாகப் பேசி எமது பிரதிநிதிகள் காலத்தைக் கடத்தி வருகின்றார்கள்.
தமது வழக்குகளை மீண்டும் தமிழ்ப் பகுதி நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும்.
அநுராதபுரம் சிறையில் காலவரையறையற்ற உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீர்மானத்தினூடாக விடுவிக்குமாறு அரசை வலியுறுத்தியும், அசமந்தப் போக்கைக் கைவிட்டும் – மழுப்பல் பதில்களை வழங்காமலும் – அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கான நேரடி அழுத்தத்தினை அரசுக்கு வழங்குமாறு எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வற்புறுத்தியும் வடக்கில் முழுமையான அடைப்பை நடத்தவுள்ளோம்.
எதிர்வரும் சனிக்கிழமை, யாழ்ப்பாணம் வருகைதரவிருக்கும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தாமதமற்றதீர்வு காணவேண்டிய இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்குமாக, நாளை வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தை மேற்கொள்ள தமிழ் மக்களை உரிமையுடன் அழைக்கின்றோம்.
அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி – நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியற் கைதிகளுக்கு எமது ஆத்மபலத்தைக் கொடுப்போம்.
தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை – இந்த நாட்டின் அரசுக்கும், எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கும், இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அணி திரள்வோம் -என்றுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை, யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, வடமாகாண புதிய அதிபர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழ ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞாக ஆய்வு மையம், கிராமி உழைப்பாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு, தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், வலி. வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழு, யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, சனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய 19 அமைப்புக்களுமே முழு அடைப்புப் போராட்டதுக்கான அழைப்பை விடுத்துள்ளன.