ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்களின் ஒரு மாத யுத்த நிறுத்தம் முடிவு!

0
471

ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்த ஒரு மாதகால யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் அங்கு புதிதாக எந்த தாக்குதலும் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் இல்லை என்று மியன்மார் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
அரகான் ரொஹிங்கிய மீட்புப் படை (அர்சா) என்ற கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்தனர். பதற்றம் கொண்ட ரகைன் மாநிலத்தில் உதவிப் பொருட்களை விநியோகிக்கவே இந்த யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த கிளர்ச்சியாளர்கள் கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி மியன்மார் பொலிஸ் நிலைகள் மீது நடத்திய தாக்குதலை அடுத்தே அங்கு தற்போதைய வன்முறை வெடித்தது.
மியன்மார் இராணுவம் முன்னெடுத்த படை நடவடிக்கை ஒன்றால் சுமார் 520,000 ரொஹிங்கிய பொதுமக்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர். இராணுவம் இன அழிப்பொன்றில் ஈடுபடுவதாக ஐ.நா கண்டனம் வெளியிட்டது.
எனினும் இந்த குற்றச்சாட்டை மியன்மார் அரசு நிராகரித்தது. கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட யுத்த நிறுத்தத்தையும் நிராகரித்த மியன்மார் இராணுவம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று அறிவித்திருந்தது.
கடந்த ஓகஸ்ட் கடைசியில் ஆரம்பமான தற்போதைய வன்முறைகளில் 500க்கும் அதிகமனோர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட மியன்மார் அரசு அதில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்கள் என்று கூறியது.
எனினும் போதிய ஆயுத மற்றும் படை பலமற்ற ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் செல்லும் அளவுக்கு மாத்திரமே திறன் கொண்டுள்ளது. அவர்களால் பாதுகாப்பு படையினருக்கு வலுவான சவால் இல்லை என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
அரகான் கிளர்ச்சியாளர்களின் யுத்த நிறுத்த காலம் முடிவுற்ற நிலையில் ரகைன் மாநில தலைநகர் சித்வேயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக அரச பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
“அர்சா தாக்குதல் நடத்தும் சாத்தியம் பற்றி எமக்கு தகவல் கிடைத்தபோதும் இதுவரை எந்த தாக்குதலும் இடம்பெற்றதாக செய்தி வரவில்லை” என்று அரச பேச்சாளர் மின் அங் நேற்று கூறினார். மியன்மார் அரசின் எந்த ஒரு அமைதி முயற்சிக்கும் தயாராக இருப்பதாக ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது. திங்கட்கிழமை நள்ளிரவுடன் அந்த குழு அறிவித்த யுத்த நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.
மியன்மாரில் குடியுரிமை மறுக்கப்படும் ரொஹிங்கிய முஸ்லிம்களின் உரிமைக்காக போராடுவதாக இந்த கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புத்த கும்பல்களின் தாக்குதல்கள் காரணமாக தமது கிராமங்களில் இருந்து பங்களாதேஷை நோக்கி ரொஹிங்கிய அகதிகள் தப்பிச் செல்வதாக அவர்களின் வாக்குமூலங்களை கொண்டு உரிமைப் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை ரகைன் மாநிலத்தில் உள்ள வயல்வெளிகள் அறுவடைக்கு தயாராக இல்லாத நிலையில் அங்குள்ள கிராமங்களில் உணவு தீர்ந்து வருகின்ற. மாநில அரசு கிராமிய சந்தைகளை மூடி, உணவு போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் மேலும் 11,000க்கு அதிகமான ரொஹிங்கிய அகதிகள் திங்களன்று எல்லையை கடந்து பங்களாதேஷை அடைந்ததாக பங்களாதேஷ் எல்லை காவல் படை குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா அகதிகளுக்கான நிலையம் கவலை வெளியிட்டுள்ளது.
“எதிர்வரும் காலங்களில் புதிய அகதிகளின் வருகை தொடர்பில் பங்களாதேஷ் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுகிறோம்” என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here