அமெரிக்காவில் மிஸிசிப்பி அருகே நேட் புயல் மையம் கொண்டுள்ளதால் கனமழை பெய்து சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. மத்திய அமெரிக்காவில் நேட் புயல் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தாக்கியது. இதனால் கனமழைக்கு 31 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலரை காணவில்லை. இதனால் மத்திய அமெரிக்க பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளித்தன. இந்த புயல் மிஸிசிப்பி கடற்கரையோரம் மையம் கொண்டதால் கடும் மழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
லூசியானா, மிஸிசிப்பி, அலாபாமா, ப்ளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் அலைகள் உயரமாக வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.
இந்த நேட் புயலானது அமெரிக்காவின் தெற்கு பகுதி நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை புரட்டிபோட்ட மரியா மற்றும் இர்மா புயல் அளவுக்கு வலுவானது இல்லை என்றாலும் இது வேகமாக நகர்ந்து வருவதால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.