பங்களாதேஷ் அகதி முகாமிலுள்ள சுமார் 14,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மடியும் தறுவாயில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஓர் ஐந்து வயதுச் சிறுவனைச் சுட்டிக் காட்டிய மருத்துவ உதவியாளர்கள், பிஞ்சுக் கையில் ஊசி குத்தக்கூடச் சதையில்லை என்றனர். எட்டு நாட்களாக அந்தச் சிறுவன் எதையுமே உண்ணாமல், பருகாமல் முழுப் பட்டினி கிடந்துள்ளதாகத் தொண்டூழியர்கள் கூறினர். மொத்தமுள்ள சுமார் அரை மில்லியன் அகதிகள், உயிர்வாழ முழுமையாக அறநிறுவனங்கள் வழங்கும் நிவாரணத்தையே நம்பியுள்ளனர்.
கூட்ட நெரிசலான அகதி முகாம்களில், உணவு விநியோகம் சரியாக ஒருங்கிணைக்கப்படுவதில்லை. நிவாரணப் பொருட்கள் வரும் போது இராணுவ வீரர்கள் ஈக்களைப் போல மொய்க்கும் அகதிகளை விரட்டுவதுண்டு.
சுட்டெரிக்கும் வெயிலில் உணவுக்காக மணிக்கணக்கில் அகதிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. 500,000 பேருக்கும் போதிய உணவு வழங்க அறநிறுவனங்கள் சிரமப்பட்டு வருகின்றன. பங்களாதேஷில் உள்ள அகதி முகாம்களுக்குப் புதிதாக வருவோரில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாவர்.
ஐந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 145,000 குழந்தைகளுக்கு, உடனடியாகச் சத்துணவு தேவை என்று உதவிக் குழுக்கள் கூறியுள்ளன. ஏழ்மையான ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்த ரொஹிங்கியா அகதிகள் பங்களாதேஷுக்கு வரும் முன்னரே போதிய உணவில்லாமல் வாழ்ந்து வந்தனர்.
இதனால் பிள்ளைகளிடையே நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவாக உள்ளது. அகதி முகாம்களில் உயிர்களைச் சூறையாடும் தொற்று நோய்களுக்கு சிறாரே அதிகம் பலியாகின்றனர்.
Google+
PrintFriendly