பிரான்சில் செல் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி!

0
1318

செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2017 நேற்று (18.06.2017) ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செல் பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரினை செல் தமிழ்ச்சங்க விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.பதி அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை செல் தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி மாலினி பீலீக்ஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.


தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறைச் செயலாளரும் செல்.பிராங்கோ தமிழ்ச் சங்கத் தலைவருமான திரு. நிமலன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச் சுடரினை 13.07.1991 அன்று ஆனையிறவு ஆகாயக் கடல் வெளிச் சமரில் வீரச்சாவடைந்த வீரவேங்கை சுரேஸ் அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றிவைக்க, மலர் வணக்கத்தை 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வீரச் சாவடைந்த கடற்கரும்புலி லெப்.கேணல் கீர்த்தி அவர்களின் சகோதரியும்,
25.10.2008 அன்று வடபோர்முனைச் (முகமாலை) சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் நித்திலன் அவர்களின் சகோதரியும்
06.08.1998 அன்று மூலமுனைச் சமரில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் விக்ரர் அவர்களின் சகோதரியும்
16.06.1990 அன்று பலாலி நேரடி மோதலில் வீரச்சாவடைந்த லெப்.வெற்றி அவர்களின் சகோதரியும் செய்துவைத்தனர்.

ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, விளையாட்டுவீரர்கள், நடுவர்களின் சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து போட்டிகளை தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் மெய்வல்லுநர் போட்டி முகாமையாளருமான இ.இராஜலிங்கம் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.
தொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் அணிநடை இடம்பெற்றது. அணிவகுப்பு மரியாதையை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவி போட்டி முகாமையாளருமான திரு.பீலிக்ஸ் அவர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்களும் செல் தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி மாலினி பீலீக்ஸ் அவர்களும் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.நிமலன் அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
எல்லாளன், பண்டாரவன்னியன், சங்கிலியன் ஆகிய மூன்று இல்லங்களிடையே மிகவும் விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றன. குறித்த மூன்று இல்லங்களும் தமது இல்லங்களை சிறப்பாக அலங்கரித்திருந்தனர். ஒவ்வொரு இல்லமும் தமது இல்லங்களின் பெயர்களுக்கு ஏற்றதுபோன்று தமது இல்லங்களில் எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன் ஆகியோர் குறித்த விடயங்களை அடையாளப்படுத்தியிருந்ததுடன், இல்லப்பரிசோதனைக்கு சென்ற குழுவினரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்ததுடன் எமது தாயகம் சார்ந்த உணவுகளையும் மோர், ஆடிக்கூழ் போன்றவற்றையும் குடிக்கக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் அழகாகப் பதில் அழித்திருந்தனர்.
இல்ல வடிவமைப்பில் பண்டார வன்னியன் இல்லம் 15 புள்ளிகளையும் சங்கிலியன் இல்லம் 10 ,புள்ளிகளையும் எல்லாளன் இல்லம் 05 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.
நின்றுபாய்தல், பந்தெறிதல், நீர்நிரப்புதல், சாக்கோட்டம், கயிறடித்தல், கலப்பஞ்சல், கயிறிழுத்தல், சங்கீதக் கதிரை, இனிப்புச்சேகரித்தல், ஓட்டம் போன்ற பல்வேறுபட்ட விளையாட்டுக்கள் காண்போரைக் கவர்ந்திருந்தன.
தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான நினைவுப் பதக்கமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டன.
தாயக மக்களின் நலன்கருதிய அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பும் குலுக்கப்பட்டு மூன்று பேருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இல்லங்கள் பெற்ற முடிவுகளின் படி ; எல்லாளன் இல்லம் 315 புள்ளிகளையும் பண்டார வன்னியன் இல்லம் 336 புள்ளிகளையும் சங்கிலியன் இல்லம் 463 ,புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.
கொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு கண்டன.

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here